செய்தியாளர்: V.M.சுப்பையா
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து, கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி கைது செய்தது. பின்னர் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை தரப்பில், ஜாபர் சாதிக் திமுகவின் நிர்வாகியாக இருந்ததால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது இதனால் இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கபட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், மணிஷ் சிஷோடியா தீர்ப்பை முன் உதராணமாக வைத்து ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீமுக்கு ஜாமீன் வழங்குவதாக தெரிவித்தார்.