தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடைசெய்ய எவ்வளவு நாட்கள் ஆகும்? - நீதிமன்றம் கேள்வி

Sinekadhara

ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய அல்லது சட்டம் இயற்றப்பட எவ்வளவு காலம் தேவைப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இணையதள சேவைகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல இளைஞர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பல இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். எனவே தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், "ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதனை முதலமைச்சரும் தெரிவித்துள்ளார். இருப்பினும் சட்டமன்றம் கூட்டப்படவில்லை என்பதால், அதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை. அரசு அதிக முக்கியத்துவத்துடன் இந்த விவகாரத்தை கையாள்கிறது. சட்ட வரைவு தயாரிக்கப்பட உள்ளது. ஆகவே விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், "நாள்தோறும் பல உயிர்கள் பலியாகின்றன. பிரபலமானவர்கள் பலர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு விளம்பரம் செய்கின்றனர். சினிமா நடிகர்களை அப்படியே பின்பற்றும் நிலை தமிழகத்தில் அதிகம் உள்ளது. ஆகவே விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆகவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்வதற்கு, அது தொடர்பான சட்டம் இயற்றுவதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்? சட்டமாக இயற்றப்பட உள்ளதா? விதியாக அமல்படுத்தப்படுமா? என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? என்பது குறித்து அரசுத்தரப்பில், பதில்மனுவாகத் தாக்கல் செய்யவேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தொடர்ந்து, விலைமதிப்பற்ற உயிர்கள் பல ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் பறிபோகின்றன. ஆகவே அதனை கருத்தில் கொண்டு விரைவாக முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.