தமிழ்நாடு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு-ஆளுநரின் செயலருக்கு நோட்டீஸ்

webteam

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரிய வழக்கில் உடனடியாக ஆளுநரின் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் மற்றும், முத்துக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், நீட் தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கும் நிலையில் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆளுநருக்கு எப்போது அனுப்பப்பட்டது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நாளை மறுநாள் நீட் தேர்வு முடிவுகள் வெளிவர உள்ள நிலையில், இது குறித்து உடனடியாக முடிவெடுப்பது அவசியம் என தெரிவித்தனர்.

இது தொடர்பாக ஆளுநரின் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி பதிலை பெற உத்தரவிட்டு, வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர். இந்த உத்தரவை உடனடியாக மின்னஞ்சல் மற்றும் வாட்ஸப் வழியாக அனுப்பவும் ஆணையிட்டனர்.