தமிழ்நாடு

ராஜேந்திர பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி தடை

webteam

உரிய ஆதாரமின்றி தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பேச அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த மே மாதம் தனியார் பாலில் ரசாயன கலப்படம் செய்யப்படுவதாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிகம் அருந்தும் பால் பொருளிலேயே கலப்படம் என்று பால்வளத் துறை அமைச்சரே கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த புகார் எழுந்தவுடன், தனியார் நிறுவன பால் மாதிரிகள் மத்திய அரசின் உணவு பரிசோதனை மையத்திற்கு சோதனைக்கு அனுப்பப்பட்டது. 

அமைச்சரின் புகாரை தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த வழக்கில் உயிருக்கு ஆபத்தான கலப்படம் இல்லை, தரம் குறைந்தவையாக மட்டுமே உள்ளது என்று அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பதை சுட்டிக்காட்டிய தனியார் பால் நிறுவனங்கள்  ஆதாரங்களின்றி அமைச்சர் தனியார் நிறுவன பால் குறித்து குற்றம் சாட்டுவதாக தெரிவித்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், உரிய ஆதாரமின்றி குற்றச்சாட்டை அமைச்சர் முன்வைக்கக் கூடாது என்றும், பால் கலப்படம் குறித்து அவர் இனிமேல் பேசக்கூடாது என்று தடை விதித்தும் உத்தரவிட்டார். மேலும் வழக்கை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.