தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிபொழிவு இருப்பதால் வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழ் மாதத்தில் கார்த்திகை மாதம் தொடக்கத்தில் இருந்து மாசி மாதம் வரை நான்கு மாதங்கள் பனி பொழிவு அதிகமாக காணப்படும். பனிக்கால தொடக்கமான கார்த்திகை மாதம் பிறந்து ஒரு வாரம் ஆகின்றது.இந்நிலையில் இன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிபட்டி, பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், அரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடும் பனிபொழிவுகள் ஏற்பட்டது.
அதிகாலை போலவே காலை 8 மணி ஆகியும், பனி மூட்டம் குறையவில்லை.இதனால் சாலையில் வரும் வாகனங்கள் முகப்பு விளக்குகள் எரிந்தவாறு சென்றன. இந்த கடும் பனி மூட்டம் காரணமாக காலை நேரங்களில் வாகனத்தில் செல்லும் வியாபாரிகள், பேருந்து ஓட்டுநர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர். கார்த்திகை மாதம் தொடங்கிய நாட்களில், இதுவரை இல்லாத அளவிற்கு இன்று கடுமையான பனி மூட்டம் ஏற்பட்டது.