தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு - வடமேற்குத் திசையில் நகர்ந்து செல்லக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழையும், ஓரிரு இடங்களில் மிக கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.