தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் சூழலில், தற்போது வளிமண்டல சுழற்சி காரணமாக வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிவரும் நிலையில், காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது:
தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் சில இடங்களிலும் மே 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் மிதமான மழை பெய்யும். குறிப்பாக ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மே 12 அன்று காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மே 14ஆம் தேதி 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூரில் இடி மின்னலுடன் கன முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, ராணிப்பேட்டை, வேலூரிலும் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.