தமிழ்நாடு

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

sharpana

தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி ஆறு போல் தண்ணீர் விழுவதால் அருவியை காண்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. இன்று காலை முதலே தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், கடையம், கடையநல்லூர், சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.

ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தற்போது கொரோனா பரவல் தடை காரணமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.