தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.
மேலும் வரும் 5ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை தொடரும் என்றும் கூறியுள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இன்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனிடையே, வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஒடிசா அருகே கரையைக் கடந்தது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடந்தபோது மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசியது.