தமிழ்நாடு

ஆறு மாதங்களுக்குப் பிறகு சென்னையில் மழை - மக்கள் மகிழ்ச்சி

ஆறு மாதங்களுக்குப் பிறகு சென்னையில் மழை - மக்கள் மகிழ்ச்சி

webteam

ஆறு மாதங்களுக்குப் பிறகு சென்னையில் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தலைநகர் சென்னையில் மழை தொடர்ந்து பொய்த்து வந்த காரணத்தால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி கடும் வெயிலுடன் சேர்த்து அனல் காற்றும் வீசியதால், மதிய நேரங்களில் வெளியே வரமுடியாத நிலை இருந்தது. எப்போது வானிலை மாறும்? வெயிலின் தாக்கம் எப்போது குறையும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்து வந்தனர். திடீரென நேற்று மதியம் ஒரு மணிக்கு மேல் சென்னையில் வெயில் முற்றிலும் குறைந்து, 2 மணிக்கு மேல் வானிலை குளுகுளுவென மாறியது. 

இந்நிலையில் தற்போது சென்னையில் மீனம்பாக்கம்,  குரோம்பேட்டை, பல்லாவரம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அத்துடன் கோவிலம்பாக்கம், ஓ.எம்.ஆர் சாலை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், போரூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இத்தனை நாட்கள் வெயில் வாட்டி வந்த நிலையில், குளர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. கேரளாவின் தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்தாலும், பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து 100 டிகிரியை தாண்டியது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். அத்துடன் மழை இல்லாத காரணத்தால், தண்ணீருக்காக மக்கள் பெரும் இன்னலை சந்தித்துள்ளனர்.