தமிழ்நாடு

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

webteam

டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு கூடுதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடுப்பட்டுள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி திருக்கார்த்திகை கொண்டாடப்படுகிறது. அந்ததினத்தில் பாபர் மசூதி இடிப்பு தினம் இருப்பதால், அதை முன்னிட்டு பழனி முருகன் கோயில் மலை மீதும், மலை அடிவாரத்திலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மலை மீது செல்லும் பக்தர்கள் கொண்டு செல்லும் பைகளும், போலீஸாரின் சோதனைக்கு பிறகே எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

பழனி நகரில் மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசுதி இடிக்கப்பட்ட தினத்தில் சமூகவிரோதிகள் நாச வேலையில் ஈடுபடலாம் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.