தருமபுரி மாவட்டம் ஏரியூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில், அலட்சியப்போக்குடன் மருத்துவம் பார்த்த அரசு மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவனை தொட்டுக்கூட பார்க்காமல், மருத்துவர் முனுசாமி மெத்தனமாக நடந்துகொண்டது குறித்து புதிய தலைமுறையில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக வட்டார மருத்துவ அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும், அந்தக் குழு இரண்டு நாட்களில் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்யும் எனவும் சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
ஏரியூர், தருமபுரி மாவட்டம் நாகமலை அடுத்த ஒட்டனூரை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகனை நாய் கடித்ததால், சிகிச்சைக்காக ஏரியூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். சிறுவனுக்கு காய்ச்சல் இருந்த நிலையில், சிறுவனை தொட்டுக்கூட பார்க்காத மருத்துவர் முனுசாமி மாத்திரைகளை மட்டும் எழுதிக்கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து கேட்டதற்கு அலட்சியமாக பதில் சொல்லிய மருத்துவர், வேண்டுமென்றால் புகார் தெரிவித்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
பொதுமக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்று அவர் பேசியிருப்பது எல்லோர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன மருந்து கொடுக்க வேண்டும் என்பது தனக்கு தெரியும் என்றும், வேண்டுமென்றால் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுங்கள் என்றும் மருத்துவர் கூறியதாக சிறுவனின் தந்தை வேதனையுடன் கூறினார்.
நோயாளிகள் அனைவரிடமும் இதே தொனியில் மருத்துவர் முனுசாமி பேசுவதாகவும், பரிசோதிக்காமல் மருத்துவம் பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஏழை எளிய மக்கள் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் மருத்துவர் நடந்து கொள்வதாக பொதுக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.