தமிழ்நாடு

சவாலில் வென்ற மாணவி: தலைமை ஆசிரியர் செய்த கௌரவம்

kaleelrahman

சவாலில் வென்ற ஐந்தாம் வகுப்பு மாணவியை தனது இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்த தலைமை ஆசிரியரின் வீடியோ வைரலாகி வருகிறது.

திருவாரூர் நகர் பகுதியில் மெய்பொருள் அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி, அங்கு பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகளை நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறார்

இந்நிலையில் தலைமை ஆசிரியர் சுமதி,  1 முதல் 20 வரையிலான வாய்ப்பாட்டை ஒப்பிக்கும் மாணவர்களை தனது இருக்கையில் அமர வைத்து, கிரீடம் அணிவித்து கௌரவிப்பதாக கூறியிருந்தார். இந்த சவாலில் 5 ஆம் வகுப்பு மாணவி சபீதா, வாய்ப்பாட்டை கடகடவென ஒப்பித்து அசத்தியுள்ளார்.

இதையடுத்து மாணவி சபீதாவை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்து, அவருக்கு கிரீடம் சூட்டி அழகு பார்த்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.