தமிழ்நாடு

பிரம்பால் சரமாரி அடி.. செல்போனில் இருந்த கோபத்தை மாணவன் மீது காட்டிய தலைமையாசிரியர்

பிரம்பால் சரமாரி அடி.. செல்போனில் இருந்த கோபத்தை மாணவன் மீது காட்டிய தலைமையாசிரியர்

Sinekadhara

திண்டுக்கல் அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் அடித்து படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இதுகுறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கே.புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் குமார் - பிருந்தா தம்பதியர். இவர்களுடைய மகன் சசிகுமார். கணவன் மனைவி இரண்டு பேரும் கூலிவேலை செய்துவருகின்றனர். மாணவன் சசிகுமார் புதுக்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை கம்ப்யூட்டர் வகுப்பின்போது ஆசிரியர் வராததால் விளையாடச் செல்வதற்கு தலைமையாசிரியர் லட்சுமணனிடம் அனுமதி கேட்க தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றுள்ளார். அப்பொழுது செல்போனில் பேசிக் கொண்டிருந்த தலைமையாசிரியர் லட்சுமணன், சிறிது நேரம் கழித்து மாணவன் சசிகுமாரிடம் விவரம் கேட்டுள்ளார். அப்பொழுது மாணவன் சசிகுமார் கம்ப்யூட்டர் ஆசிரியர் வராததால் மாணவர்கள் அனைவரும் விளையாட செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

ஏற்கெனவே செல்போனில் வாக்குவாதம் செய்து கடும் கோபத்தில் இருந்த தலைமையாசிரியர் லட்சுமணன் அந்த கோபத்தை மாணவன் சசிகுமார் மீது காட்டியுள்ளார். மாணவனை பிரம்பால் இரண்டு கைகள் மற்றும் முதுகு என பல இடங்களில் அடித்துள்ளார். இதில் மயக்கமடைந்த மாணவன் அங்கேயே கீழே விழுந்துள்ளார். பிறகு அவரை மற்ற மாணவர்கள் அவனது வீட்டில் விட்டுச் சென்றனர்.

வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய சசிகுமாரின் தாயார் பிருந்தா மகன் இருந்த நிலைமையை கண்டு உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். மேலும் இது தொடர்பாக ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியர் லட்சுமணன் மாணவனை அடித்ததாக புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று 08.02.22 மாணவன் சசிகுமாரின் உறவினர்கள் தலைமை ஆசிரியரை உடனடியாக பணியிட மாற்றம் செய் வேண்டும் என வலியுறுத்தி பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் 1 மணி நேரம் ஆசிரியர்கள் யாரும் பள்ளிக்குச் செல்லாமல் வெளியே நின்று உள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மற்ற ஆசிரியர்களை பள்ளிக்குச் செல்ல அனுமதித்தனர். இதனையடுத்து தற்போது ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்திற்கு தலைமை ஆசிரியர் லட்சுமணனை அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.