தமிழ்நாடு

யார் பஜனை நடத்த கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களா? ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வழக்கில் நீதிமன்றம் கேள்வி

webteam

தஞ்சை பெரிய கோயிலில் யார் பஜனை நடத்த அனுமதி கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களா? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

தஞ்சை பெரிய கோயிலில், வாழும் கலை அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நடத்தும் தியான நிகழ்ச்சி தொடங்குவதாக இருந்தது. இதற்கு கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கட் என்பவர் தரப்பில் அவரது வழக்கறிஞர் முத்துக்கிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், "யுனெஸ்கோவால் சோழர்களின் சிறப்பான கோயில் என்ற சிறப்பைப் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில், இதுபோன்ற தனியார் அமைப்புக ளுக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிப்பது கோயிலின் சிறப்பைப் பாதுகாக்கத் தவறும் நடவடிக்கை.

நிகழ்ச்சியை நடத்தும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், 2017- ஆம் ஆண்டு யமுனை நதிக்கரையில் மாசு ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடத்தியதற்காக பசுமை தீர்ப்பாயத்தால் 5 கோடி அபராதம் விதிக்கப்பட்டவர். ஆகவே, தஞ்சை பெரிய கோயிலில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்த தடை விதிக்க வேண்டும்" என வழக்குத் தொடர்ந்தார்.

இதையடுத்து அந்நிகழ்ச்சிக்கு தடை விதித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, மத்திய தொல்லியல்துறை அதிகாரி 13-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.முன்னதாக, இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இந்நிலையில், நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், "நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட் டதில் நிச்சயம் உள்நோக்கம் இருக்கிறது. நிகழ்ச்சியை தஞ்சை பெரிய கோயிலில் நடத்த வேண்டும் என்று மக்கள் ஆசைப்பட்டனர். இந்து கோயிலில் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் தியானம் செய்யக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது" என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தொல்லியல் துறை சார்பில், கோயில் நிர்வாகத்தின் பரிந்துரையை ஏற்று பெரிய கோயிலில் பஜனை நடத்த அனுமதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டது. அப்படியென்றால் யார் பஜனை நடந்த அனுமதி கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களா? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இது ஏற்க தக்கதல்ல, தஞ்சை பெரிய கோயில் பாரம்பரியமானது என்பதால் நீதிமன்றம் தலையிடுகிறது’ என்று கூறியது. பின்னர் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது.