தமிழ்நாடு

வரதட்சணைக் கொடுமை: தாய் வீட்டிற்கு சென்ற கர்ப்பிணி மனைவியை கத்தியால் வெட்டிய காதல் கணவர்!

webteam

வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்ததால் தாய் வீட்டுக்கு வந்த மனைவியை 6 மாத கர்ப்பணி என்றும் பாராமல் கணவன் வெட்டிய சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

சென்னை அயனாவரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்கள் இயேசு ரத்தினம் - ஸ்டெல்லா மேரி தம்பதியர். இவர்களது மகள் டெபோரா அதே பகுதியைச் சேர்ந்த ராகேஷ் என்பவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், திருமணமான மூன்று மாதத்தில் டெபோராவை கணவர் ராகேஷ் அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து டொபோரா 6 மாத கர்பிணியாக உள்ளார். இதைத் தொடர்ந்து ராகேஷ் வரதட்சணை கேட்டு அடிக்கடி தொல்லை கொடுத்ததால் டெபோரா தனது தாயார் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனிடயே நேற்று முன்தினம் மாமியார் வீட்டிற்கு வந்து தனது மனைவி டொபோராவை வீட்டிற்கு வருமாறு ராகேஷ் அழைத்ததோடு தகராறும் செய்துள்ளார். மேலும், தனிக்குடித்தனம் செல்வதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து வரமறுத்த டொபோராவை கர்ப்பிணி என்றும் பாராமல் கத்தியால் வெட்டியுள்ளார். சத்தம் கேட்டு தடுக்க வந்த மாமியார் ஸ்டெல்லா மேரியை ராகேஷ் கையில் வைத்திருந்த கத்தியை வைத்து கை, தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டியுள்ளார்.

இதில் ஸ்டெல்லாவின் கை வெட்டுப்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தொடர்பாக அயனாவரம் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தாக்குதல் நடத்திய ராகேஷை இதுவரை காவல் துறையினர் கைது செய்யவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

ராகேஷ் மீது வழக்குப் பதிவு செய்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ராக்கேஷ் வீட்டில் இருந்து எகிறி குதித்து தப்பியோடும் போது கால் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறி ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.