திண்டுக்கல் மாவட்டம் பழனி பாஜக அலுவலகத்தில் கட்சியினுடைய முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று செய்தியாளர் சந்திப்பினை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் தொழிற்சாலை எதிர்ப்புக்கு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அதற்கான உரிமையை ரத்து செய்துள்ளது. அதனை ரத்து செய்துள்ள மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கும், அந்தத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அவர்களுக்கும், விவசாயிகளின் கோரிக்கையை தேசிய தலைமை இடம் எடுத்துச் சென்ற மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நன்றியும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
தொடர்ந்து பேசியவர், "திருப்பரங்குன்றத்திற்கு அசைவ உணவு கொண்டு வந்து கோவிலுக்கு செல்லும் படியில் உட்கார்ந்து சாப்பிட்டதை எப்படி தமிழக அரசு அனுமதித்தது.. பழனியில் தைப்பூசம் வருகின்றது. இதற்கு அன்னதானம் வழங்குவதற்கு அனுமதி வாங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.. அதற்கு தர்ச்சனை எவ்வளவு என ஏன் சேகர்பாபு அறிவிக்கவில்லை..
நம்மை பிடித்த ஏழரை இந்த சேகர்பாபு... சேகர்பாபு ஒரு Anti hindu, ‘இந்த மசூதியில், இந்த கந்தூரியில், இங்கதான் சந்தனம் வாங்க வேண்டும்’ என பேசுவீர்களா? சேகர் பாபு இந்துவே இல்லை. இந்த கிரிப்டோவிடம் மாட்டிக் கொண்டு இந்து அறநிலைத்துறை அமைச்சகம் சிரமப்படுகிறது
அன்னதானம் வழங்குவது இந்துக்களின் கடமை, இதனை இடையூறு செய்ய நீங்கள் யார்? .. நான் வந்து உணவு கொடுப்பேன், எந்த அனுமதியும் வாங்க மாட்டேன், இனி என்ன வேணாலும் செய்” என காட்டமாக பேசினார்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து பேசியவர், "அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் கைதாகி உள்ள ஞானசேகருக்கு ஆறு போலீசார் வாக்கி டாக்கி உடன் உதவியுள்ளது. கருணாநிதி ஒருமுறை ‘காவல்துறைக்கு 50 சதவீதம் ஈரல் அழுகிப் போய்விட்டது’ என சொன்னார். தற்போது அவர் மகன் ஆட்சியில் காவல்துறையின் ஈரல் 100 சதவீதம் அழுகிவிட்டது" என விமர்சனம் செய்தார்.
மேலும் “மாணவி குறிப்பிட்ட அந்த சார், ஒரு சார் கிடையாதாம், அது நான்கு சார் என தகவல் வருகிறது. தற்போது ஸ்டாலின் சர்க்கார் எவ்வளவு கேவலமாக, கீழ்த்தரமா அழுகிப்போய் அருகதியற்ற அரசாக தமிழகத்தில் உள்ளது பாருங்கள்" என பேசினார்.