தமிழ்நாடு

“ஸ்ரீரங்கம் கோயில் ஊழல்களை கூறியதால் ரங்கராஜன் கைது” - ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

webteam

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் ஊழல்கள் குறித்து குரல் கொடுத்துவருவதால் ரங்கராஜன் என்பவர் கைது செய்யப்பட்டதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். 

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் குறித்தும், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் குறித்தும் அவதூறாக ஃபேஸ்புக்கில் பதிவு செய்ததாக ரங்கராஜன் என்பவர் மீது, கோயில் இணை ஆணையர் ஜெயராமன் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் ரங்கராஜனை கைது செய்த ஸ்ரீரங்கம் போலீஸார், திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனை விசாரித்த நீதிமன்றம், இனிமேல் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்றும், காவல்துறையினர் விசாரணைக்கு அழைக்கும்போது ஒத்துழைப்பு தரவேண்டும் எனக்கூறி விடுவித்தனர்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட ஹெச்.ராஜா, “ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் ஊழல்கள் குறித்து குரல் கொடுத்துவரும் ரங்கராஜன் மீது ஊழல் துறையின் அதிகாரி அளித்த பொய் புகாரின் அடிப்படையில் கைது செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நாளை நீதிபதி மகாதேவன் முன்வரும் வழக்கில் அவர் ஆஜராவதை தடுக்கும் முயற்சியே இது” என்று தெரிவித்துள்ளார். நீதிபதி மகாதேவன் சிலைகடத்தல் வழக்குகளை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.