தமிழ்நாடு

மாதவராவ் உட்பட 6 பேருக்கு 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்

webteam

குட்கா முறைகேடு வழக்கில் கைதான மாதவராவ் உட்பட 6 பேருக்கு செப்டம்பர் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கி சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு.

2013-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி தமிழகத்தில் குட்கா பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய தடை விதித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. ஆனாலும் தடையை மீறி தமிழகத்தில் குட்கா தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்வதாக புகார்கள் எழுந்தன. 2016-ஆம் ஆண்டு ஜூலை 7 மற்றும் 8-ஆம் தேதிகளில், சென்னை செங்குன்றத்தில் உள்ள எம்.டி.எம். குட்கா நிறுவனத்துக்கு சொந்தமான கிடங்கில், வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அப்போது அந்நிறுவனம் 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது  தெரிய வந்தது. அத்துடன் மாதவ ராவ் வீட்டில் கைப்பற்றி டைரியில், குட்கா விற்பனைக்காக யார், யாருக்கு எவ்வளவு லஞ்சம் தரப்பட்டது என்ற விவரம் இருந்தது. அந்த டைரியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை பெருநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக தகவல் வெளியானது.

இது தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், சுமார் 35 இடங்களில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, ரயில்வே டிஎஸ்பி மன்னர் மன்னன் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் குட்கா முறைகேடு விவகாரத்தில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக 6 பேரை கைது செய்துள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்ட இடைத்தரர்கள் ராஜேஷ், நந்தகுமார் உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், கலால்வரித்துறை அதிகாரி பாண்டியன், கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா ஆகியோரை தீவிர விசாரணைக்கு பிறகு செப்டம்பர் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.