தமிழ்நாடு

“என் அறிவுரைப்படியே ஓபிஎஸ் தியானம் மேற்கொண்டார்” - குருமூர்த்தி பேச்சு

webteam

தனது அறிவுறுத்தலின் படியே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் மேற்கொண்டதாக துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி கூறியுள்ளார்.

திருச்சியில் துக்ளக் பத்திரிகையின் பொன்விழா சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அந்த பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி, “இரண்டாக பிரிந்த அதிமுகவை இணைத்ததில் தனக்கு பங்கு உள்ளது. எனது அறிவுறுத்தலின் படியே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தியானத்தில் அமர்ந்தார். அதன்பின்னரே கட்சியில் இணைப்பு ஏற்பட்டது. அதிமுக ஆட்சியை கவிழ்த்தால் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்துவிடும் என தான் பயந்தேன். ரஜினி அரசியலுக்கு வந்தால் தான் தமிழகத்திற்கு மாற்றம் வரும்” என்று பேசினார்.

மேலும், “மகாராஷ்டிரா அரசியலில் நடப்பது இறுதிக்கட்டம் அல்ல. சரத்பவார் என்ன நினைக்கிறார் என்று சிவசேனா கட்சிக்கு கூட தெரியாது. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி, பாஜக ஆட்சி அமைத்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் பாரதிய ஜனதாவை ஆதரிக்கிறேன்” எனப் பேசினார்.