தமிழ்நாடு

குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணையத்தில் வெளியீடு!

webteam

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 நேர்முகத்தேர்வு மற்றும் 2ஏ நேர்முகத் தேர்வு அல்லாத பணிகளுக்கான முதன்மை தேர்வு 25ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்நிலையில் அதற்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2022ஆம் ஆண்டின் மே மாதம் 21ஆம் தேதியன்று, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிக்கான முதல்நிலை தேர்வை நடத்தியது. முதல்நிலை தேர்வு எழுதிய 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 பேரில், 57 ஆயிரத்து 641 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான முதன்மை தேர்வு தான், தற்போது நடைபெற உள்ளது.

குரூப்-2 பிரிவில் நேர்முகத் தேர்வு பதவிகளான 11 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், 2 நன்னடத்தை அலுவலர்கள், 19 உதவி ஆய்வாளர்கள், 17 சார்பதிவாளர் நிலை-2 பணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான 8 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், ஒரு சிறப்பு உதவியாளர், 58 தனிப்பிரிவு உதவியாளர்கள் என மொத்தம் 116 இடங்களுக்கும், குரூப்-2ஏ நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளில் வரும் 9 நகராட்சி பணியாளர் ஆணையர் நிலை-2 பணியிடங்கள், 291 முதுநிலை ஆய்வாளர்கள், 972 இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர்கள் உள்பட 5,413 இடங்களுக்கும் தேர்வு நடைபெற இருக்கிறது.

முதன்மை தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்விற்கு தனியாக தரவரிசை பட்டியலும், நேர்முகத்தேர்வு அல்லாத பகுதிகளுக்கு தனியாக தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும். அதன் அடிப்படையில் துறைவாரியாக காலி பணியிடங்களுக்கு தேர்வு செய்யபட்டவர்கள் ஒதுக்கீடு செய்யப்படுவார்கள்.

இந்நிலையில் முதன்மை தேர்வெழுதும் தேர்வர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை ஒருமுறை பதிவு செய்யப்பட்ட பதிவின் விவரம் கொண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் இணையதளத்தில், https://apply.tnpscexams.in/public/otr?app_id=UElZMDAwMDAwMQ== என்ற லிங்கில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.