திருவள்ளூரில் வரதட்சனையாக கேட்ட நகையில் 10 சவரன் குறைந்ததால் மணமகன் தாலி கட்டும் நேரத்தில் தலைமறைவானார்.
திருவள்ளூவர் மாவட்டம் மணவாளநகரில் வசிக்கும் ஜானகிராமன் என்பவர் தனது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளார். திருமண நிச்சயம் செய்திருந்த நிலையில், மணமகன் வீட்டார் வரதட்சனையாக 50 சவரன் நகை, 2 எல்.இ.டி டிவி, ஏசி உள்ளிட்ட பொருட்களைக் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு ஜானகிராமன் சம்மதித்த நிலையில், நேற்று திருமண மண்டபத்தில் வரவேற்பும் நடந்திருக்கிறது.
இதற்கிடையில் வரதட்சனையாக கேட்ட 50 சவரனில் 10 சவரனை தர ஜானகிராமன் கால அவகாசம் கேட்டிருக்கிறார். அதற்கு ஒத்துக்கொள்ளாத மாப்பிள்ளை, மணமேடைக்கு வராமல் தாலி கட்டும் நேரத்தில் தலைமறைவாகி இருக்கிறார். அதையடுத்து பெண் வீட்டார் மாப்பிள்ளையின் தாய் மற்றும் உறவினரைப் பிடித்து காவல்நிலைத்தில் ஒப்படைத்தனர். தாலி கட்டும் நேரத்தில் மணமகன் தப்பியோடியதால் 50 லட்சம் ரூபாய் செலவழித்தும் மகளின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டதாக பெண் வீட்டார் சோகத்துடன் தெரிவித்தனர்.