தமிழ்நாடு

பரோட்டா தொண்டையில் சிக்கி உயிரிழந்த புதுமாப்பிள்ளை

பரோட்டா தொண்டையில் சிக்கி உயிரிழந்த புதுமாப்பிள்ளை

Rasus

சாப்பிடும்போது தொண்டையில் பரோட்டா சிக்கி புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி கருவடிக்குப்பம் பாரதி நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன் (32). இவரது மனைவி சண்முக சுந்தரி. இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. மனைவி சண்முகசுந்தரியின் சொந்த ஊர் திருநெல்வேலி. இதனால் கடந்த வாரம், சண்முகசுந்தரி தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். புருஷோத்தமன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதனிடையே புருஷோத்தமன் கடந்த 4-ம் தேதி இரவு கடையில் பரோட்டா வாங்கி வந்து அதை சாப்பிட்டுக்கொண்டே, அவரது மனைவி சண்முகசுந்தரிக்கு போன் செய்துள்ளார். போனில் மனைவிடம் பேசியபடியே புருஷோத்தமன் பரோட்டா சாப்பிட்டுள்ளார். அப்போது பரோட்டா தொண்டையில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவரால் பேச முடியவில்லை.

இதனால் பதட்டமடைந்த அவரது மனைவி சண்முகசுந்தரி தொடர்ந்து போனில் பேசியும் எந்தப் பதிலும் இல்லை. இதனால் பதட்டமடைந்த அடைந்த அவர், தனது உறவினருக்கு போன் செய்து தகவலை தெரிவித்தார். உறவினர்கள் வந்து பார்த்தபோது, மயங்கிய நிலையில் புருஷோத்தமன் கீழே விழுந்து கிடந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதனிடையே புருஷோத்தமனின் பிரேத பரிசோதனையில், ஒரு பெரிய பரோட்டா துண்டு மூச்சுகுழலுக்குள் சென்று அடைத்ததால் சுவாசிக்க முடியாமல் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பரோட்டா தொண்டையில் சிக்கி புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.