தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை உறவினர்கள் நிறுத்தியதால், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வாழ்வு தர மாப்பிள்ளை காவல்நிலையம் சென்ற நெகிழ வைக்கும் நிகழ்வு வேலூரில் அரங்கேறியுள்ளது.
வேலூர் மாவட்டம் திப்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த ரவி என்பவருக்கும், பலன்சாத்துகுப்பம் பகுதியைச் சேர்ந்த ரோஜா பிரியா என்பவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட வண்ணம், காலை சென்பாக்கம் விநாயகர் கோயிலில் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் தாலி கட்டும் நேரத்தில் உறவினர்கள் திருமணத்தை நிறுத்திவிட்டனர்.
இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்து நிற்க, மாப்பிள்ளை வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் நேரடியாக சென்று புகார் அளித்தார். இதையடுத்து இருவீட்டாரையும் அழைத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மணப்பெண் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரிந்தே திருமணம் முடிவு செய்யப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் உறவினர்கள் சேர்ந்து திருமணத்தை நிறுத்தியதாக கூறியுள்ள மணமகன் ரவி, பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்றும், தாம் விரும்பியே அவரைத் திருமணம் செய்வதாகவும் கூறினார்.
மணமகனுக்கு திருமணத்தில் முழு சம்மதம் இருப்பதால் அவரை யாரும்தொல்லை செய்யக்கூடாது என்று மணமகன் வீட்டாரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். இதையடுத்து ரோஜா பிரியாவை பதிவுத்திருமணம் செய்து கொள்வதாக கூறி எழுதிக்கொடுத்துவிட்டு மணமகள் வீட்டுடனேயே ரவி சென்றுவிட்டார். ஒருபெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தனது உறவுகளையே எதிர்த்த மணமகனின் செயல் பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.