தமிழ்நாடு

சென்னை: துணி காயப்போடும்போது இடிந்து விழுந்த பால்கனி.. மூதாட்டி பரிதாப உயிரிழப்பு

webteam

சென்னையில் துணி காயப்போடும் போது பால்கனி இடிந்து கீழே விழுந்ததில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சென்னை மயிலாப்பூர் பக்தவச்சலம் சாலையில் உள்ள சுமந்த் குடியிருப்பில் வசித்து வந்தவர் பத்மஜா தேவி (82). மூதாட்டியான இவர் வீட்டிலேயே தங்கி சிறு வேலைகள் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று பத்மஜா துவைத்த துணியை இரண்டாம் மாடியில் உள்ள பால்கனியில் காயப்போடும் போது திடீரென பால்கனி இடிந்து விழுந்தது. இதில் தவறி விழுந்த மூதாட்டி படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த மூதாட்டியை அருகிலிருந்த குடியிருப்புவாசிகள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.