RN Ravi - Senthil Balaji - MK Stalin File image
தமிழ்நாடு

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கிய ஆளுநரின் உத்தரவு நிறுத்திவைப்பு?

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய விவகாரத்தில், ஆளுநர் தன் உத்தரவை நிறுத்திவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

webteam

நேற்று ஆளுநர் மாளிகை, செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், 'அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில், கடுமையான கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். அமைச்சர் பதவியை தவறாகப் பயன்படுத்தி, தன் மீதான விசாரணைக்கும் அவர் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார்.

Governor RN Ravi

தற்போது நீதிமன்ற காவலில் அமலாக்கத் துறை விசாரணையில் அவர் உள்ள நிலையில், தமிழக காவல் துறையிலும் அவர் மீது சில வழக்குகள் உள்ளன. இதனால் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். எனவே, உடனடியாக அவரை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கியுள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

cm stalin

இதையடுத்து தமிழக அரசியலில் பரபரப்பு பற்றிக் கொண்டது, இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியபோது, “அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை. இதைச் சட்டரீதியாகச் சந்திப்போம்” எனத் தெரிவித்திருந்தார்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சியின் தலைவர்கள், ஆளுநருக்கு எதிராக தங்களது எதிர்ப்புகளை கடுமையாக தெரிவித்திருந்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி

இப்படியாக தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ஆளுநரின் இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம், ஆளுநர் தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி நீக்கம் தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை பெறவும் ஆளுநர் ரவி முடிவு எனத் தகவல் வெளியாகியுள்ளது.