தமிழ்நாடு

மாணவிகளுக்கு மாதந்தோறும் பணம்... புதுமைப் பெண் திட்டத்தை இன்று தொடக்கி வைக்கிறார் முதல்வர்

webteam

உயர்கல்வி செல்லும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று, உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. புதுமைப் பெண் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த திட்டத்தில், மாணவிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட உள்ளது. இதற்காக நடப்பாண்டில் மட்டும் 698 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.

ஆசிரியர் தினமான இன்று, புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்படுகிறது. சென்னை ராயபுரம் பாரதி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து புதுமைப் பெண் திட்டத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைக்கிறார். இதற்காக நேற்று டெல்லியில் இருந்து சென்னை வந்த அவருக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.