தமிழ்நாடு

45 நாள்களில் கே.பி.பார்க் குடியிருப்பில் குறைபாடுகளை சரிசெய்ய அரசு உத்தரவு

நிவேதா ஜெகராஜா

சென்னையில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட கே.பி.பார்க் குடியிருப்பில் குறைபாடுகளை 45 நாள்களில் சரிசெய்ய கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற கே.பி.பார்க் குடியிருப்பில் ஐஐடி குழு அறிக்கை அளித்ததன் அடிப்படையில், அங்கு மீண்டும் சிமெண்ட் பூச்சு பணி நடக்கிறது. 45 நாள்களுக்குள் பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனம் சிமெண்ட் பூச்சு பணிகளை முடிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கழிவறைகளில் பழைய பீங்கான்களை எடுத்துவிட்டு புதிய பீங்கான்களை போட உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் கட்டிட குடியிருப்புகள் மோசமான நிலையில் கட்டப்பட்டது புதிய தலைமுறையின் கள ஆய்வில் தெரியவந்தது. புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக கட்டடிடங்களை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் உறுதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். இதையடுத்து, தரமற்ற வகையில் கட்டப்பட்ட கே.பி.பார்க் குடியிருப்பு தொடர்பாக ஐஐடி குழு ஆய்வு செய்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில், 'தரமற்ற வகையில் குடியிருப்பை கட்டிய பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனத்தை தடை பட்டியலில் சேர்க்கவும் ஐஐடி குழு பரிந்துரைத்துள்ளது. அரசு ஒப்பந்தங்களில் சம்பந்தபட்ட நிறுவனத்துக்கு இனி ஒப்பந்தங்கள் வழங்கக் கூடாது' என தெரிவிக்கப்பட்டது. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் இறுதி ஆய்வறிக்கையை ஐஐடி குழு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.