தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்டம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவுக்கான பணிகள் குறித்து அரசாணை

நிவேதா ஜெகராஜா

ஆன்லைன் ரம்மி சட்டம் இயற்றுவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்ட நிலையில், அதற்கான அரசாணையை தமிழகத்தின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ளார்.

உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டிருக்கும் அந்த அரசாணையில், இந்த ஆன்லைன் விளையாட்டுகள் உண்மையிலேயே திறன்களை வளர்கிறதா என்பது குறித்து இந்த குழு ஆராயும் என தெரிவித்துள்ளார். மேலும், `ஆன்லைன் விளையாட்டு தொடர்பான விளம்பரங்களை தடை செய்வது எவ்வாறு என்பது குறித்தும் இந்தக் குழு ஆராய வேண்டும். ஆன்லைன் விளையாட்டுக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் நிதி இழப்புகள் குறித்தும் ஆராய வேண்டும். இணையவழி பணபரிவர்த்தனை எந்த அளவுக்கு கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆராய வேண்டும். ஆன்லைன் விளையாட்டு தடை செய்வது தொடர்பான சட்ட மசோதாவை உருவாக்குவதற்கான காரணங்களை தெளிவுபடுத்த வேண்டும்’ என்பன உள்ளிட்ட 7 விவகாரங்கள் குறித்து இந்த குழு ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவிற்கு தேவையான வசதிகளை டிஜிபி மற்றும் சென்னையில் உள்ள உயர் அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும் எனவும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச் சட்டம் தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

-எம்.ரமேஷ்