தமிழ்நாடு

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர் - குருவிக்காரர் சமூகத்தினர்... தமிழ்நாடு அரசு அரசாணை

webteam

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள், குருவிக்காரர் சமூகத்தினர் ஆகியோரை இணைத்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் நமக்கு தெரியவருவது - “நாடோடி பழங்குடியின சமூகத்தினரான நரிக்குறவர், குருவிக்காரர் இனங்கள் தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் வந்துள்ளது. இந்த கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதை அடுத்து, பழங்குடியினர் பட்டியலில் 37-வது இனமாக சேர்த்து மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. அதன்படி தமிழ்நாடு அரசும் தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வகுப்பு மாணாக்கர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளதால், வரும் கல்வியாண்டிலேயே இப்பிரிவுகளைச் சேர்ந்த அனைவரும் பழங்குடியினர் சான்றிதழ்களை பெற்று பயனடைய வேண்டும் என்பதற்காக, காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டு, மத்திய அரசு வெளியிட்டவாறே, தமிழ்நாடு அரசும் இந்த அறிவிக்கையை வெளியிட்டுள்ளது”

மத்திய அரசின் அறிக்கையில், சில மாற்றங்களை தமிழ்நாடு அரசு முன்வைத்துள்ளது. அதன்படி மத்திய அரசு தனது திருத்தப்பட்ட அறிவிக்கை வெளியிடும்போது, தமிழ்நாடு அரசு கோரியவாறு பெயர் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசும் அதனை திரும்ப வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு கோரியவாறு பெயர் மாற்றம் செய்து மத்திய அரசு தனது திருத்தப்பட்ட அறிவிக்கையும் தற்போது வெளியிட்டுள்ளது.