தமிழ்நாடு

லால்குடி: அரசு ஜீப் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு - சக மாணவி கவலைக்கிடம்

kaleelrahman

அரசு ஜீப் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். சக மாணவி கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி பகுதியைச் சேர்ந்த பூபாலன் என்பவரது மகன் வினோத் (23). இவர், சிறுகனூர் பகுதியில் உள்ள எம்ஏஎம் பொறியியல் கல்லூரியில் எம்பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் இவரும், இவருடன் படிக்கும் பெண் நண்பரான பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பானு (21) என்பவரும் நேற்ற மாலை வினோத்தின் இருசக்கர வாகனத்தில் புள்ளம்பாடியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, தச்சங்குறிச்சி அருகே வந்தபோது லால்குடியில் இருந்து சிறுகனூர் நோக்கி அதிவேகமாக வந்த நெடுஞ்சாலை துறையின் அரசு வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில், கல்லூரி மாணவர் வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த கல்லூரி மாணவி பானு, தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த சிறுகனூர் போலீசார், வினோத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.