தமிழ்நாடு

குடிபோதையில் ஓட்டுநரின் கண்ணை பாட்டிலால் குத்திக் கிழித்த சக ஓட்டுநர்

webteam

சென்னை தாம்பரம் மாநகர பேருந்து பணிமனையில் ஓட்டுநாரக இருப்பவர் கோவிந்தராஜ் (44). இவர் கடந்த 22 ஆண்டுகளாக ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் பணியை முடித்து விட்டு தனது சம்பளம் தொடர்பாக பணிமனை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சக ஓட்டுநர் குமார் என்பவர் மதுபோதையில் இருந்துள்ளார். மேலும் மது குடிப்பதற்காக அங்கு சில மதுபாட்டில்களையும் அவர் வைத்திருந்துள்ளார். அப்போது குமாருக்கும், கோவிந்தராஜுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

வாக்குவாதம் முற்றவே குமார் மது அருந்திக் கொண்டிருந்த பாட்டிலை உடைத்து கோவிந்தராஜ் முகத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கோவிந்தராஜை, சக ஊழியர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காயம்பட்ட கோவிந்தராஜூக்கு 18 தையல் போடப்பட்டுள்ளது. கண்ணுக்கு அருகில் மதுபாட்டிலால் குத்தியிருப்பதால்,நரம்பியல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர் கூறியுள்ளனர். இதனால் உள் நோயாளியாக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோடிய குமார் மீது தாம்பரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.