gopalkrishna gandhi writes letter to vijay web
தமிழ்நாடு

”சித்தாந்தம் என்ன என்றால் இதைச் சொல்லுங்கள்..” விஜய்க்கு மகாத்மா காந்தியின் பேரன் கடிதம்..!

தமிழக தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு மகாத்மா காந்தியின் பேரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 34.92% வாக்குகளுடன் 108 இடங்களை வென்று, 1967க்குப் பிறகு திமுக, அதிமுக அல்லாத தனிப் பெருங்கட்சியாக உருவெடுத்த விஜயின் தவெக, எம்ஜிஆரின் சாதனையையும் முறியடித்துள்ளது. பெரும்பான்மை இல்லாத தொங்கு சட்டசபை சூழலில், மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி, தி ஹிந்தூவில் திறந்த கடிதம் எழுதி, கூட்டாட்சி, மதச்சார்பற்ற தன்மை, மனசாட்சி வழிகாட்டும் ஆட்சியை வலியுறுத்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு காணாத ஒரு மும்முனை போட்டியை கண்டுள்ளது. முதல் தேர்தலிலேயே 34.92% வாக்குகளை பதிவுசெய்த விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றிபெற்றதோடு, 1967-க்கு பிறகு திமுக, அதிமுக இரண்டில் ஒன்றில்லாமல் தனிபெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது. மேலும் முதல் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற எம்ஜிஆரின் (33.52%) சாதனையை முறியடித்து விஜய் வரலாறு படைத்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்

விஜய்யின் தவெக 108 தொகுதிகளை வென்றபோதிலும், பெரும்பான்மையை எட்டாததால் தொங்கு சட்டசபையே தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரிகளுக்கு தவெக ஆதரவுகோரியிருக்கும் நிலையில், காங்கிரஸ் மட்டுமே இதுவரை ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி தமிழக தேர்தலில் வெற்றிபெற்ற தவெக தலைவர் விஜய்க்கு திறந்த கடிதம் ஒன்றை தி ஹிந்தி பத்திரிக்கையில் எழுதியுள்ளார்.

அந்தகடிதத்தில், “ அன்புள்ள முதலமைச்சர் (தேர்ந்தெடுக்கப்பட்ட) சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு, உங்களின் மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகளும் மனமார்ந்த பாராட்டுகளும். தமிழக முதலமைச்சராக உங்கள் பதவிக்காலம் மகத்தான வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன். நான் உங்கள் மற்றும் எனது மாநிலத்தின் வாக்காளர். ஆனால், ஏப்ரல் 23ஆம் தேதி அன்று உங்களுக்கு வாக்களித்த சுமார் 35% பேரில் நான் இல்லை. உங்களுக்கு வாக்களிக்காத 65% பேரில் நானும் ஒருவன்.

விஜய்க்கு இளைஞர்களிடையே கவர்ச்சி இருக்கிறது, அது ஓட்டாக மாறாது என்ற பரவலான கருத்தை நானும் ஏற்றுக்கொண்டிருந்தேன். ஆனால், மே 4 அன்று புள்ளிவிவரங்கள் வெளிவரத் தொடங்கியபோது, ​​நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். அந்த அதிர்ச்சியோடு ஒருசேர இந்த எண்ணமும் தோன்றியது “அவன் புதியவன், அதாவது அவனுக்கு அனுபவம் இல்லை. ஆனால் அதே சமயம், ஊழல்வாதியான, தந்திரமான மோசக்காரர்களின் பிடியில் சிக்காத, புத்துணர்ச்சியான ஒருவனாகவும் இருக்கிறான்” என்று தோன்றியது.

மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்களே, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முக ஸ்டாலினிடம் சில கருத்துக்களைத் தெரிவிக்க நான் துணிந்ததைப் போலவே, உங்களிடமும் அவ்வாறே செய்யத் துணிகிறேன்.

நீங்கள் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிட்டீர்கள், அவையில் நடைபெறும் மிக முக்கியமான நம்பிக்கை வாக்கெடுப்பில் நீங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை. இந்தியாவின் கூட்டாட்சி மற்றும் மதச்சார்பற்ற கட்டமைப்பைப் பாதுகாப்பதை உங்கள் முதன்மை முன்னுரிமையாகக் கொள்வது அவசியம். உங்கள் தலைமையிலான அரசு, அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் தூணாக நிற்கட்டும். உங்கள் பதவியைக் காப்பாற்றுவது குறித்த எந்தப் பதற்றமும், அதில் சமரசம் செய்துகொள்ள உங்களை எதுவும் தூண்ட வேண்டாம்.

உங்கள் சித்தாந்தம் என்ன என்று உங்களிடம் கேட்கப்படலாம். அது உங்களைக் கலங்கச் செய்ய வேண்டாம். அவர்களிடம், 'என் சித்தாந்தம் “சித்தாந்தம் அற்றது” என்று கூறுங்கள். மேலும், “அது என் மனசாட்சியை பின்பற்றுவதாகும்” என்றும் கூறுங்கள்.

எல்லா வகையிலும் விஜயாக மட்டுமே சட்டசபைக்குள் நுழையுங்கள். ஆனால், வெற்றிப்பெருமிதம் நல்ல உடையாக அமையாது, விடாமுயற்சியே நல்ல உடையாக அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கு முன் பதவிவகித்த முக ஸ்டாலின், பெரியார் விட்டுச்சென்று பேரறிஞர் அண்ணா வளர்த்தெடுத்த, ஒரு முழு சமூகத்தின் சுயமரியாதை எனும் போற்றத்தக்க சிந்தனைப் பாரம்பரியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இது பிளவுபட்ட ஒரு சமூகத்தில் சம வாய்ப்பைக் கொண்டுவர ஒரு இயக்கம் மேற்கொண்ட தீவிர முயற்சியாகும். உங்களிடம் ஒரு புதிய தொடக்கம் இருக்கிறது, அவரிடம் அனுபவம் இருக்கிறது. இந்த விசயத்தில் அவரை பின்பற்றுங்கள். நீங்கள் இருவருமே கூட்டாட்சி சுயம் மற்றும் மதச்சார்பற்ற சமத்துவத்தின் சாராம்சத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

விஜய், உதயநிதி ஸ்டாலின்

உங்களுக்கும், உதயநிதிக்கும் இடையேயான போட்டியான நடாலுக்கும் ஃபெடரருக்கும் இடையேயானதாக இருக்கவேண்டும்.

உங்கள் 108 சட்டமன்ற உறுப்பினர்களில் மூவர் மட்டுமே இதற்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள். மீதமுள்ளவர்கள், அந்த மூவரிடமிருந்தும், அவர்களை எதிர்கொள்ளும் மூத்தவர்களிடமிருந்தும், என்ன செய்யக்கூடாது என்பது உட்பட அனைத்தையும் கற்றுக்கொள்ளலாம்!” என நீண்ட கடிதத்தை எழுதியுள்ளார்.