Railway Police
Railway Police pt desk
தமிழ்நாடு

உரிய ஆவணங்கள் இன்றி ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.20 கோடி மதிப்புடைய தங்க நகைகள் பறிமுதல்

webteam

சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர் வரை சோழன் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம் வழியாக செல்லும் இந்த ரயில், செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட எஸ்.1 கோச்சில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கழிவறையில் இரண்டு பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் கையில் பைகளுடன் இருந்தனர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில், 1 கிலோ 900 கிராம் தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. ஆனால், அதற்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் இருவரும் சென்னை சௌகார்பேட்டையைச் சேர்ந்த அமித் பி ஜெயின் (44) மற்றும் ராம்லால் (44) என்பதும், இவர்கள் ரயிலில் தங்கத்தை எடுத்துச் சென்று நகை கடைகளில் வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார், வணிகவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர். இதன் மதிப்பு ரூ.1 கோடி 20 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.