தமிழ்நாடு

”இன்னிக்கு நான் ஆபிஸ் வரல; நாங்க குடும்பத்தோடு..” - போன் செய்துவிட்டு எடுத்த விபரீத முடிவு

webteam

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை நீலாங்கரை, செங்கேணியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் ராம்குமார் (35), இவர் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவருடன் அவரது தாய் மீனாட்சி (60), மற்றும் அக்கா சந்தானமாரி (40), அவரது மகள் சண்முகபிரியா (20), ஆகியோர் வசித்து வந்தனர்.

இந்நிலையில், ராம்குமாருக்கு அதிகளவில் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், இன்று மதியம் தான் பணிபுரியும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு இன்று வேலைக்கு வரவில்லை என்றும் நாங்கள் அனைவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

இதையடுத்து உடன் பணிபுரிபவர்கள் வந்து பார்ப்பதற்குள் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. உடனடியாக நீலாங்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்து அவர்கள் வந்து ஆம்புலன்ஸ் வரவழைத்து பரிசோதித்து பார்த்ததில் சந்தானமாரி மற்றும் சண்முக பிரியா இருவரும் உயிரிழந்தனர்.

ராம்குமாரும், அவரது தாய் மீனாட்சியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக நீலாங்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.