செய்தியாளர்: V.M.சுப்பையா
ஞானசேகரனின் தாய் கங்காதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், தனது மகன் ஞானசேகரனை கடந்த டிசம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தொடர்பான வழக்கில் காவல்துறையினர் கைது செய்ததாகவும் அதன் பிறகு ஜனவரி 5ஆம் தேதி தனது மகன் ஞானசேகரன் மீது சென்னை மாநகர காவல் துறை ஆணையர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார் .
தனது மகன் மீதான பாலியல் வழக்கு 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதிவு செய்யப்பட்டுள்ள நேரத்தில் இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பழைய வழக்குகளை காரணம் காட்டி காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைத்துள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கக் கூடிய எந்த விதிமுறைகளையும் மாநகர காவல் துறையினர் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும் ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாக தனது மகன் மீது வேண்டும் என்றே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. எனவே சட்ட விரோத காவலில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனை விடுவிப்பதுடன் தனது மகன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லக்ஷ்மிநாரயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் மூன்று வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.