அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஞானசேகரன் என்பவரை கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது திருட்டு வழக்குகள் உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.
ஞானசேகரன் தொடர்ச்சியாக இதே போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இந்த வழக்கை "சிறப்பு புலனாய்வு குழுவினர் (SIT)" விசாரணை செய்து வருகின்றனர். ஞானசேகரின் மனைவி மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களிடமும் "சிறப்பு புலனாய்வு குழுவினர்" தீவிரமாக விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சிறப்பு புலனாய்வு குழுவினர் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் சென்னை காவல்துறை ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் ஒரு வருடம் அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது இது நான்காவது முறை என போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கையை நீதிமன்றத்தில் கூடிய விரைவில் சமர்ப்பிக்க இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.