தமிழ்நாடு

27 நாட்கள்..2200 கி.மீ! கல்லூரி மாணவனின் ’புவி வெப்பமயமாதல்’ விழிப்புணர்வு சைக்கிள் பயணம்!

webteam

புவி வெப்பமயமாதல் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி, 27 நாட்கள் 2200 கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளில் சுற்றி வந்த நாகை மாணவருக்கு, மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நாகை ஆரியநாட்டுதெரு கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிமாறன் என்பவரின் மகன் ஹரிஹர மாதவன். இவர், புவி வெப்பமயமாதல் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி, கடந்த மாதம் 18 ஆம் தேதி நாகையில் இருந்து விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டார்.

ராமேஸ்வரம் தூத்துக்குடி கன்னியாகுமரி, ஊட்டி, கோவை தர்மபுரி வேலூர் திருவண்ணாமலை கும்பகோணம் என 2200 கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளில் பயணம் மேற்கொண்ட ஹரிஹர மாதவன் 27 நாட்களுக்குப் பின் நாகை வந்து சேர்ந்தார்.

நாகை வந்த அவருக்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், சமூக ஆர்வலர்கள், ஆரியநாட்டுத்தெரு மீனவ கிராம மக்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அவருக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

மலை, மேடு, பள்ளம் என 2200 கிலோமீட்டர் தூர சைக்கிள் பயணம் கடுமையாக இருந்தாலும், தனக்கு அது புதிய அனுபவத்தை தந்ததாகவும், வழிநெடிகிலும் தான் சந்தித்த மக்களிடம் குளோபல் வார்மிங் பற்றி எடுத்துரைத்ததாகவும் இதன் மூலம் மக்கள் அனைவரும் சுற்றுச்சூழலை காக்க முன்வர வேண்டும் என்றும் கல்லூரி மாணவர் ஹரிஹர மாதவன் கூறினார்.