பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்களை குண்டுகட்டாக தூக்கி போலீசார் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவரையும் பதற வைத்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே இவ்விவகாரத்தில் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று முதலே மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நேற்று திருச்சி மற்றும் கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்களின் போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகிறது.
அதன்படி பொள்ளாச்சியிலும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பொள்ளாச்சி சுற்றுவட்டார கல்லூரிகளில் இருந்து ஒன்றுதிரண்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் நகராட்சி அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஏராளமான மாணவ- மாணவிகள் பங்கேற்றுள்ளனர். ‘பெண்களை வாழவிடு’, “பெண்களுக்கு பாதுகாப்பு கொடு”, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்களுடன் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போலீசார் அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் மாணவர்களை குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். ஆனால், போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு மாணவ மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் மாணவர்கள் மாணவிகளுக்கு பாதுகாப்பாக முன்முறம் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் போலீசார் ஒவ்வொரு மாணவரையும் தனி தனியாக பிரித்து அந்த இடத்தை விட்டு அகற்றினர். இதனால் போராட்ட கூட்டம் சிறிது சிறிதாக களைந்தது. இதை சுதாரித்து கொண்ட கல்லூரி மாணவிகள் மாணவர்களுக்கு முன்பாக வந்து தங்கள் கைகளை கோர்த்து வேலி போன்று மாணவர்களை பாதுகாத்தனர். இதனால் போலீசார் பெண்களை இழுக்க முடியாமல் திணறினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.