ஃபேஸ்புக் ,டிக்டாக், டப்ஸ்மாஷ் மூலம் சுயபடங்கள், வீடியோக்களை பதிவிடுவதால் பெண்களே குற்றாவளிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
காதல் எனும் பெயரில் இளம்பெண்கள் ஆபாசமாக படமெடுக்கப்பட்ட கொடூர சம்பவம் பொள்ளாச்சியை பதைபதைக்கச் செய்திருக்கிறது. பெண்களை ஏமாற்ற சமூக வலைத்தளங்களை கொடூரர்கள் எப்படி சாதகமாக்கிக் கொள்கிறார்கள் ? என்பது தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. சமூக வலைத்தளங்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறதோ இல்லையோ, பெரும்பாலும் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்படுவது பொள்ளாச்சி கொடூர சம்பவத்தில் இருந்து மீண்டும் தெளிவாகிறது.
செல்ஃபோனும், சமூக வலைத்தளங்களும் வாழ்வில் தவிர்க்க முடியாதவை. ஆனால் தவிர்க்க வேண்டியதாகவும் ஆகின்றன. சமூக ஊடகங்களை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் சில கொடூரர்கள். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் எப்போதும் ஆன்லைனிலும், ஆக்டிவாகவும் இருக்கும் பெண்களே இவர்களின் இலக்கு. ஃபேஸ்புக்கில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பயன்படுத்தினாலும், அதில் தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்படும்போது, சுயவிவரங்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
யார் சிக்குவார்கள் என வலைத்தளங்களில் வலை விரித்துக் காத்திருக்கும் கொடூரர்களுக்கு, பொழுதுபோக்கு என நினைத்து டிக்டாக், டப்ஸ்மாஷ் மூலம் சுயபடங்கள், வீடியோக்களை பதிவிடுவதால் பெண்களே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக வல்லுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அந்தப் பெண்களிடம் சமூக வலைத்தளத்திலேயே ஆதரவாக பேசி, ஆர்வத்தைத் தூண்டி, ஆசை வார்த்தைகளை உதிர்க்கின்றனர். அவர்களை நம்பும் பெண்கள், சிறிது காலத்தில் நெருங்கிப் பழக ஆரம்பிக்கும்போது, விட்டில் பூச்சியாக தானாகச் சென்று பிரச்னையில் சிக்கிக் கொள்வதாக கூறுகிறார்கள் சைபர் வல்லுநர்கள். சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தால், அவற்றை காவல்துறையால் கூட எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்பதே கசப்பான உண்மை என்கிறார்கள் அவர்கள்.