தமிழ்நாடு

ஆரணி: அசைவ ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு

Sinekadhara

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அசைவ ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட 20 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுமி உயிரிழந்ததை அடுத்து, அந்த ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.

ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் மணிகூண்டு அருகே இயங்கிவரும் அசைவ ஓட்டலில், ஆனந்த் என்பவரது குடும்பத்தினர் புதன்கிழமை தந்தூரி பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆனந்தின் 10 வயது மகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். அதே போல், அந்த ஓட்டலில் சாப்பிட்ட ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த ஜாகிர் பாத்திமா, விஷ்ணு சீனிவாசன், தனியார் பள்ளி ஆசிரியர் பாஸ்கரன் உள்ளிட்ட 19 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆரணி கோட்டாட்சியர் கவிதா, ஆரணி டிஎஸ்பி கோடீஸ்வரன் இருவரும் விசாரணை நடத்தி, அசைவ ஓட்டலுக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து அங்கு பரிமாறப்பட்ட உணவு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.