ஃபேஸ்புக் காதலனுக்காக பெற்ற தாயை குத்திக் கொலை செய்ததாக கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். முகநூலில், முகம் பார்க்காமலே வளர்ந்த காதல், கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது.
திருவள்ளூர் ஆஞ்சநேயபுரத்தைச் சேர்ந்த பானுமதியின் 2-ஆவது மகளான தேவிபிரியா, தனியார் கல்லூரியில் படித்து வந்தார். ஃபேஸ்புக்கில் அதிக நேரத்தைச் செலவிடும் பழக்கம் கொண்ட தேவிபிரியாவுக்கு, விவேக் என்ற இளைஞரின் அறிமுகம் முகநூலில் கிடைத்துள்ளது. ஃபேஸ்புக்கில் வேர்விடத் தொடங்கிய இவர்களின் காதல், பழகிய சிறிது நாட்களிலேயே அசைக்கமுடியாத ஆலமரமாகிவிட்டது. அதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இவர்கள் இருவரும், ஒருமுறையேனும் பார்த்துக் கொண்டதோ, சந்தித்ததோ இல்லை என்பது தான்.
இந்த விவகாரம் தாய் பானுமதிக்கு தெரியவரவே, அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தேவிபிரியாவை கண்டித்துள்ளார். தாயின் பேச்சை மதிக்காத தேவிபிரியா, ஃபேஸ்புக் காதலன் விவேக்குடன், வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்தார். விவேக்கின் நண்பர்களான அஜித் மற்றும் விக்னேஷ் ஆகியோரின் உதவியுடன் வீட்டில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற தேவிபிரியாவை, தாய் பானுமதி தடுத்து நிறுத்த முயன்றார். அதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாகியுள்ளது.
ஒருகட்டத்தில் அதீத ஆத்திரமடைந்த தேவிபிரியா, பெற்ற தாய் என்றும் பாராமல் பானுமதியின் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் குத்திவிட்டு தப்பியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். தப்பியோட முயன்ற தேவிபிரியாவின் ஃபேஸ்புக் நண்பர்கள் இருவரையும் விரட்டிப் பிடித்த மக்கள், சரமாரியாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பானுமதியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இறுதியில் காவலர்களிடம் சிக்கிக் கொண்ட தேவிபிரியாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில், யார் என்றே தெரியாத நபர்களுடன் ஏற்படும் உறவு, காதலிப்பவர்களுக்கு மட்டுமின்றி, அதனை கண்டிக்கும் பெற்றோருக்கும் எமனாகிவிடும் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.