சேலம் file image
தமிழ்நாடு

சேலம்|குளிர்பானத்தில் செத்து மிதந்த 'பல்லி'.. அருந்திய சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

சேலத்தில் பல்லி விழுந்த குளிர்பானத்தை குடித்த சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டநிலையில், மருத்துவமனையில் அனுமதி.

ஜெனிட்டா ரோஸ்லின்

சேலம் மாவட்டம் மேட்டூர், காவேரி கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், (40) . இவர் கம்பி கட்டும் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி, (38 ). இவர்களுக்கு மகன், மகள்கள் உள்ளனர். இவர்கள் மேட்டூர் அரசு பள்ளியில் படித்துவருகின்றனர்.

இந்தநிலையில்தான், ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டியில் உள்ள அம்மன் கோவில் பண்டிகைக்கு, உறவினர் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது, ஓமலூரில் உள்ள பேக்கரி ஒன்றில், 4 பாட்டில் குளிர்பானம் வாங்கி வந்துள்ளார் சிறுமிகளின் சகோதரர்.

இதை ப்ரியதர்ஷினி உட்பட உறவினர்கள் சிலரும் இதனை குடித்துள்ளனர். அப்போது, குளிர்பானத்திலிருந்து வந்த சிறு உருவம் பிரியதர்ஷினியின் வாயில் பட்டநிலையில், அதிர்ச்சியடைந்த அவர் அதனை துப்பியுள்ளார். இதனையடுத்து உள்ளே இருந்தது என்னவென்று பார்த்தபோது, பல்லி அல்லது அரணை போல் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரியதர்ஷினி மற்றும் குடும்பத்தினர், பேக்கரி கடை ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.

பின்னர் , உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் தெரிவித்தனர். இதற்கிடையே, அதைக் குடித்த சிறுமிக்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது. மேலும் ஒருவருக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில், ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து ஓமலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.