தமிழ்நாடு

’நேரமாச்சு இறங்குங்க!’..நடுவழியில் பயணிகளை இறக்கிவிட்ட அரசு பேருந்து நடத்துநர்!

webteam

நேரமாகிவிட்டதாகக் கூறி பொதுமக்களை பாதி வழியில் இறக்கி விட்ட ஓட்டுநரின் செயலால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பால பணிகள் மற்றும் புதிய பேருந்து நிலைய பணிகளின் தாமதத்தால் சோழவந்தான் அரசு பணிமனையில் இருந்து செல்லும் பேருந்துகள் குறிப்பிட்ட காலத்திற்குள் செல்ல முடியாததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

நேற்றிரவு பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கருப்பட்டி கிராமத்திற்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த 63 ஆம் நம்பர் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது அடுத்த ட்ரிப்புக்கு நேரம் ஆகிவிட்டதாகக் கூறி சோழவந்தான் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டனர். இதனால் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனருடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக மேலாளரை தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை. இரவு 9 மணிக்கு நடுவழியில் இறக்கி விட்டதால் சுமார் 10 கிலோமீட்டர் தூரமுள்ள கருப்பட்டி இரும்பாடி ஆகிய ஊருக்கு செல்ல வழி இல்லாமல் பொதுமக்கள் தவித்தனர்.

இதையடுத்த 24 மணி நேரத்தில் பிரச்னையை சரிசெய்யா விட்டால் கிராம மக்களை ஒன்று திரட்டி சோழவந்தானில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை முற்றுகையிடப் போவதாகவும் அங்கு இருக்கும் பேருந்துகளை வெளியே விட அனுமதிக்க மாட்டோம் என்றும் பொதுமக்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.