தமிழ்நாடு

திருவள்ளூரில் விமர்சையாக நடைபெற்ற புவி இயற்கை அங்காடியின் முதலாம் ஆண்டு நிறைவு விழா

webteam

புவி இயற்கை அங்காடியின் முதலாம் ஆண்டு நிறைவு விழா 17.07.2022 ஞாயிறு அன்று, திருவள்ளூர் ராஜாஜி புரம் பகுதியில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் துளசி நாராயணன், பல்லுயிர் பெருக்கம் விவசாயத்தில் எத்தகைய முக்கியமான பங்கு வகிக்கிறது என்பது குறித்து விவசாயத்தில் ஈடுபாடு கொண்ட இளைஞர்களை ஊக்குவித்து பேசினார்.

இயற்கை விவசாயி பாலாஜி மற்றும் புவி நளினி ஆகியோர் தாங்கள் உருவாக்கிய புதிய முயற்சியான Healthy home foods  எனும் மதிப்புக் கூட்டல் பொருட்கள் குறித்து உரையாடினர். இந்திரா கார்டன்ஸ்  உரிமையாளர் மைத்ரேயன் மாடித் தோட்டம் தொடர்பான விவரங்கள், அதன் முறைகளை விளக்கினார்.

விழாவிற்கு தலைமை ஏற்று பேசிய வெற்றிமாறன், “இயற்கை விவசாயத்தில் இளைஞர்களின் ஈடுபாடு குறித்தும், நுகர்வுக் கலாச்சாரத்தால் இயற்கை பாழாவது குறித்தும் நம்மாழ்வார் குறிப்பிட்ட ராணுவ வீரரின் கதையை முன்வைத்து பேசியதோடு, இத்தகைய முயற்சியை தொடர்ச்சியாக மாதா மாதம் செய்ய வேண்டும்” என விழா ஒருங்கிணைப்பாளர்களை ஊக்கப்படுத்தினார்.

கொரொனா காலத்தில் காலம் சென்ற பஞ்சகவ்யா ரகு மற்றும் இயற்கை விவசாயி ஐயா குட்டி ஆகியோரது திருவுருவப் படத்தை திறந்து வைத்த இயற்கை விவசாயி லெனின், இயற்கை விவசாய சேவை குறித்து பேசினார். இந்த விழாவில் 15 வகையான இயற்கை உணவுகளை சமைத்து வழங்கிய மணிகண்டன், பௌனியா, ரக்ஷிதா ஆகியோரை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்த விழாவில், திருவள்ளூர் மாவட்ட அறிவியல் இயக்க செயலாளர் மோசஸ் பிரபு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயலாளர் செந்தில், காக்களூர் ஏரி புனரமைப்பு குழு தலைவர் சண்முகம், இயற்கை ஆர்வலர்கள், சரத் சந்தர், தீபா மற்றும் இயற்கை விவசாயி மேலமடை குமார் ஆகியோர் பங்கேற்றனர்.