செய்தியாளர்: . கிறிஸ்துராஜன்
சென்னை புழல் அடுத்த கதிர்வேடு பிரிட்டானியா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (57). இவர் லாரி டிரான்ஸ்போர்ட் வைத்து நடத்தி வந்தார். இவருக்கு 17 வயதில் ஒரு மகளும், சுமன்ராஜ் 15, கோகுல்ராஜ் 13 என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். அருகில் உள்ள தனியார் பள்ளியில் சுமன்ராஜ் 10ஆம் வகுப்பும், கோகுல்ராஜ் 8ஆம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 1 ஆம் தேதியன்று செல்வராஜ் தமது மகன்களுடன் இரவு உணவு அருந்திவிட்டு பக்கத்தில் உள்ள தமது மற்றொரு வீட்டில் தூங்க சென்று உள்ளனர். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் செல்வராஜும் அவரது இரண்டு மகன்களும் வெளியே வராத நிலையில் அவரது மனைவி சென்று பார்த்த போது வாயில் நுரை தள்ளியபடி மூவரும் சடலமாக கிடந்துள்ளனர்.
இதுகுறித்து புழல் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த புழல் காவல்துறையினர் தந்தை, இரண்டு மகன்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
லாரி டிரான்ஸ்போர்ட் வைத்து தொழில் நடத்தி வந்த நிலையில் கடன் தொல்லை காரணமாக செல்வராஜ் தமது மகன்களுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையின் முதல் கட்டமாக சந்தேகித்தனர். இதனிடையே இவர்களது அறையில் நள்ளிரவு ஜெனரேட்டர் இயங்கியதால் அதிலிருந்து வெளியேறிய புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்களா என காவல்துறை தரப்பில் சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவிலேயே உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் இறந்தவர்களின் நுரையீரலில் கார்பன் மோனாக்சைடு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மூவரும் விஷமருந்தி தற்கொலை செய்யவில்லை எனவும், மூச்சு திணறல் ஏற்பட்டே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது ஜெனெரேட்டர் இயங்கியதாகவும், அனைத்து கதவுகளையும் அடைத்து விட்டு ஜெனெரேட்டர் இயக்கியதால் அதிலிருந்து வெளியேறிய கார்பன் மோனாக்சைடு ஆக்சிஜனுடன் கலந்து மூவரும் சுவாசிக்கும் போது நுரையீரலை பாதித்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.