அண்ணாமலை
அண்ணாமலை  புதிய தலைமுறை
தமிழ்நாடு

“மூன்றாம் உலகப் போர் சூழலை தவிர்க்க மோடியால் மட்டுமே முடியும்” - அண்ணாமலை நம்பிக்கை

webteam

செய்தியாளர் - சுரேஷ்குமார்

பல்லடம் அருகே கே.அய்யம்பாளையத்தில் கடந்த 1972 ஆம் ஆண்டு நடந்த மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டு உயிர் நீத்த சுப்பையன் மற்றும் முத்துக் குமாரசாமி ஆகியோரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

Annamalai

அப்போது பேசிய அவர்...

உயிர் நீத்த தியாகிகள் முத்துக் குமாரசாமி மற்றும் சுப்பையன்:

“அய்யம்பாளையத்தில் மிக முக்கியமான ஒரு சின்னம் உள்ளது. அதை அனைவரும் மறந்து விட்டனர். அதை நினைவுபடுத்துவது நமது கடமை. 1972 ஆம் ஆண்டு 20 பைசா மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிராக போராடி உயிர் நீத்த தியாகிகள் முத்துக் குமாரசாமி மற்றும் சுப்பையன் ஐயா அவர்களின் நினைவுச்சின்னம் இங்கு அமைந்துள்ளது. இங்கு நினைவஞ்சலி செலுத்துவதற்கான காரணம் நமது உரிமையை நாமே ஜனநாயகத்தில் பெற்றெடுக்க வேண்டும். தியாகி சுப்பையன் அவர்களின் மகன் ராஜேந்திரன் மற்றும் அவரது மருமகள் கவிதா ஆகியோர் எங்களுடன் இருக்கின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு:

கடந்த ஆண்டு பல்லடம் அருகே கள்ளக் கிணறு கிராமத்தில் உள்ள தங்களது தோட்டத்தில் அமர்ந்து மது அருந்திய நபர்களை தட்டிக் கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு நேற்று வந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களின் கல்விச் செலவை பாஜக ஏற்றுக் கொண்டது. நேற்று நீதிமன்றம் 5 குற்றவாளிகளில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனையும் ஒரு நபருக்கு ஆறாண்டு கால தண்டனையும் வழங்கியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பு ஒரு விதத்தில் எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அந்த குடும்பத்தினரின் குழந்தைகள் பாஜகவின் பாதுகாப்பில் உள்ளனர். காவல்துறையினர் மிக வேகமாக செயல்பட்டு இந்த வழக்கை முடித்துள்ளனர். இந்த தீர்ப்பு ஒரு விதத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்கும்.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் நேரடி போர் சூழல் தொடங்கியுள்ளது:

இஸ்ரேல்- பாலஸ்தீனா போர்

ரஷ்யா உக்ரைன் போரே இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கு முன்பு சிரியாவில் நடந்த தாக்குதலில் ஈரான் அதிகாரிகள் இறந்தார்கள். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் நேரடி போர் சூழல் தொடங்கியுள்ளது. இந்த போர் நேரத்தில்தான் இந்தியாவின் தலைமை இன்னும் வலிமையாக இருக்க வேண்டும். நாட்டை பாதுகாக்க, இறையாண்மையை பாதுகாக்க 2024ல் பிரதமர் மோடி தலைமை மிக அவசியமாக உள்ளது. காரணம் கடினமான ஒரு சூழ்நிலைக்குள் உலகம் சென்று கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் போர் சூழல் நிலவினாலும் மோடி அவர்கள் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது.

மூன்றாம் உலக போர் சூழலை தவிர்க்க மோடி அவர்களால் மட்டுமே முடியும்:

மூன்றாம் உலகப் போர் சூழலை தவிர்க்க முடியும் என்றால் அது மோடி அவர்களால் மட்டுமே முடியும். அனைத்து உலகத் தலைவர்களிடமும் பேச முடியும் என்றால் அது மோடி அவர்களால் மட்டுமே முடியும். 2029ல் உலகத்தினுடைய தலைவராக மோடி அவர்கள் உருவெடுப்பார். உலகத்தின் முன்னணி நாடாக இந்தியா இருக்கும்.

hamas - israel war

15 முதல் 18 ரூபாய் வரை பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளோம்:

பெட்ரோல் விலையை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவரப்படும் என நாங்கள் எப்போதோ அறிவித்து விட்டோம். ஆனால், மாநில அரசுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் 15 ரூபாய் முதல் 18 ரூபாய் வரை பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளோம். கேஸ்-க்கு 300 ரூபாய் மானியம் அளித்துள்ளோம்.

வாக்குப்பதிவு இயந்திரம்...

இந்தியாவைப் பொறுத்தவரை வாக்குச்சீட்டில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு நாம் மாறிவிட்டோம். 2024 ஆம் ஆண்டு தோல்விக்கு பிறகும் I.N.D.I.A. கூட்டணி இது போன்ற காரணங்களை சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள். ஓட்டுச்சீட்டு முறை இருந்தபோது கிராம பகுதிகளில் என்னெல்லாம் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். கள்ள ஓட்டு இப்போது தடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா தொழில் நுட்பததில் வேற லெவலில் உள்ளது. தேர்தல் நடத்தும் முறையில் இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக உள்ளது எனவே அமெரிக்காவை பார்த்து இந்தியா காப்பி அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவை பார்த்துதான் அமெரிக்கா காப்பியடித்துள்ளது” என்றார்.