தமிழ்நாடு

23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிக்கிறது - சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி அறிவிப்பு!

ச. முத்துகிருஷ்ணன்

23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிக்கிறது என சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி பொதுக்குழு மேடையில் அறிவித்தனர்

ஒற்றைத் தலைமை பிரச்னையால் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் எழுந்துள்ள சூழலில் அதிமுக பொதுக்குழு இன்று கூடுகிறது. சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு நடைபெறுகின்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளியூரில் இருந்து வாகனங்கள் மூலம் வானகரத்தில் குவிந்து வருகின்றனர். கடும் போக்குவரத்து நெரிசலை கடந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொதுக்குழு நடக்கும் மண்டபத்திற்கு வந்தடைந்தனர்.

ஓ.பன்னீர்செல்வத்தை பொதுக்குழுவை விட்டு வெளியே போகச் சொல்லி முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில் மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து இபிஎஸ் ஆதரவாளர்கள் கரவொலி எழுப்பி ஆரவாரம் அடைந்தனர்.

இதையடுத்து பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியும் 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக அறிவித்தார். மேலும் ஒற்றைத் தலைமை வர வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம் என்றும் ஆதலால் அடுத்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும் அவர் மேடையில் அறிவித்தார்.\