அமெரிக்கா-ஈரான் போரின் விளைவாக உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் திருமண மண்டபங்களில் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் உணவு தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் போர் சூழலால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அது நேரடியாக, தட்டில் இருக்கும் உணவுகளில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, அதிக நேரம் எரிபொருள் தேவைப்படும் தோசை, ஆப்பம், தந்துரி போன்ற உணவுகளைத் தயாரிப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து தவாக்களைச் சூடாக வைத்திருக்க வேண்டியிருப்பதால், கேஸ் தட்டுப்பாடு நிலவும்போது இந்த உணவுகளைத் தயாரிப்பதை உணவகங்கள் தவிர்க்கத் தொடங்கியுள்ளன.
மத்திய அரசு வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளிப்பதால், வணிக சிலிண்டர்களின் வரத்து குறைந்துள்ளது. இதன் விளைவாக, சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள உணவகங்கள் தங்கள் மெனுவைச் சுருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. மின்சார அடுப்புகளுக்கு மாற முடியாத சிறிய உணவகங்கள் கடையை மூடும் நிலைக்குச் சென்றுள்ளன. இதனால் வரும் நாட்களில் உணவுகளின் விலை உயரக்கூடும் என ஹோட்டல் சங்கங்கள் எச்சரித்துள்ளன.
இந்தசூழலில் தமிழ்நாட்டில் திருமண மண்டபங்களுக்கு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், மண்டப உரிமையாளர்களும், திருமண வீட்டாரும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேற்காசிய போரின் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், திருமண மண்டபங்களுக்கான சிலிண்டர் விநியோகத்தை, ஏஜென்சிகள் நிறுத்தியுள்ளன. இதனால், திருமண விருந்துகளுக்கு உணவு சமைப்பதில், பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போதைக்கு பிரச்னை ஏற்பாடத வகையில் சிலிண்டர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போர் தொடரும் பட்சத்தில் இந்தப்பிரச்னை பூதாகரமாகும் நிலை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.