விநாயகர், உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை
விநாயகர், உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை ட்விட்டர்
தமிழ்நாடு

”விநாயகர் சிலைகளை வைத்து தேவையில்லாத சட்டம், ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடாது”-உயர்நீதிமன்ற கிளை

PT WEB

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ‘விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படும். பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

இந்நிலையில் வருகிற 18ஆம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் நிலையில், திருச்செந்தூர் தாலுகாவில் ஏழு இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு, பின்னர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று திருச்செந்தூர் கடலில் கரைக்க அனுமதி கோரி உத்தரவிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி முன்பு இன்று (செப்.14) விசாரணைக்கு வந்தது. அப்போது, ”பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து தேவையில்லாத சட்டம், ஒழுங்குப் பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடாது.

மதுரை நீதிமன்றம்

இவ்வாறு சிலை வைக்கப்படும் பகுதியில் சீருடைப்பணியில் உள்ள காவல்துறையினர் விநாயகர் சிலைகளைப் பாதுகாக்க இரவுபகலாக பணிசெய்ய வேண்டியுள்ளது. இவையெல்லாம் தேவையா? சாதாரண ஒரு விஷயத்தை ஏன் இப்படி பெரிதாக்கிக் கொள்கிறீர்கள்” எனக் கேள்வி எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து, ”மனுதாரர் சிலை வைக்கக்கூடிய இடங்களுக்கு தனித்தனியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை அணுகி உரிய மனு அளிக்க வேண்டும். அதனடிப்படையில் மனுதாரர் சிலை வைக்க, காவல்துறை அனுமதிக்க வேண்டும்” என கூறிய நீதிபதிகள், ”காவல்துறையினர் விதிக்கக்கூடிய விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்” என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.